காலியாகிப் போன
மதுகோப்பையில்
நிரம்பிவிட்டிருந்தது
நிறமில்லாதொரு
வெற்றிடம்

வரவழைக்கப்பட்ட உற்சாகம்
வடிந்து போய்
வெகுநேரமாகி போயிருந்த
ஒர் இரவில்
ஆயத்தமில்லாமல் உயிர்பெற்று
கொண்டது நாளையற்ற
ஒன்றை குறித்ததென்
தீவிரம்

வரிசைப்படுத்தப்பட்ட
புட்டிகளில்
நிரம்பிகிடக்கிறது
பலவிதங்களாய் ரசம்

கோப்பையினுள்
நிரப்புவதும் பின்
காலிசெய்வதுமென
தள்ளாடியபடியே
வந்தடைகின்றன
பெருவாசலை கால்கள் .....

துயர் கொண்டலையும் வார்த்தைகள்

முன்னேற்பாடிலில்லாத ஒரு பொழுதில்
இரைந்து விட்டுச் சென்ற
வலிமிகுந்த சொற்களை
துடைத்தெறிகிறேன்
என்னிலிருந்து முற்றிலுமாக

மென்று விழுங்கிய பின்னும்
நாவிற்கடியில்
தேங்கி நிற்கிறது
காடியில் தோய்த்த
ஒன்றிரண்டு ...

கடும்பாலையன உறைந்துவிட்ட
அக்கணத்திலிருந்து
கையூன்றி கடக்கையில்
பிசுபிசுக்கிறது
மிதித்து நசுக்கிய
மனத்தின் ரணம்

அகந்தை கொண்டலைந்த
ஒரு பறவையின் அலகுகளுக்கு
தின்னக் கொடுத்துவிட்டதுபோக
எஞ்சியிருந்தது
உயிரற்றவை ஒன்றிரண்டு...

இதயத்தின் மிக அருகில்
நின்று விசும்பிக் கொண்டிருக்கிறது
ஏனென்று கேட்கபடாத
வலியொன்று...

கண்ணீரின் குரல்

அந்தரத்தில் தாவும் கால்கள்
உணர்ந்திருக்குமா
வாழ்விற்கும் சாவிற்குமான
இடைவெளியின் தூரத்தை..


இருத்தலின் பசி இழுத்துச்
செல்கிறது எவரையும் ஏதோவொரு
விளிம்பின் எல்லைவரை ......


சிரித்து கொண்டிருக்கும் முகத்திற்கு
பின்னால் மறைந்திருக்கக்கூடும்
இது வரமா சாபமா
என்றதொரு முடிவில்லா கேள்வி...


யார் கேட்டிருப்பார்
அழுகின்ற கண்ணீரின்
குரலை.....

சிவசக்தி

சக்தியின் மீதேறி ஆடும்
சிவனின் கால்கள்
இறங்குவதேயில்லை
ஒருபோதும்


வலிந்து துடைத்தெறியும்
சக்தியின் கண்ணீர்
பெரும் ஆறாகி வழிகிறது
அவள் உடலெங்கும்


தன்இருப்பை விட்டு விலகிட
கால் கடுக்க
தவமிருக்கிறாள் சக்தி
பன்னெடுங்காலமாக...

என் முதல் கவிதை

ஒரு நடுநிசியில் எதிர்பார்த்திராத
ஒரு பொழுதில்
உயிர் பெற்று உருக்கொண்டது

அடிநெஞ்சில் கணன்று கொண்டிருக்கும்
சூட்டில் வைத்து பாதுகாத்தேன்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய்
முளைக்க வளர்தெடுத்தேன்

அதற்கான நாளை அதுவே
குறித்துக் கொண்டது

கவனமாய் காத்திருந்தேன்
வெயில் தின்று கருத்த ஒரு
மாலை வேளையில்
பெற்றேடுத்தேன்

என் முதல் கவிதையை

சில கண்ணீர்துளிகளோடும்
சில புன்சிரிப்போடும்
என் குளக்கரையில் அமர்ந்துகொண்டு கல்லெறிவதை
தயவுசெய்து நிறுத்திவிடு

சலனங்களை மறைத்துகொண்டு
நெளிந்து சுளித்து ஓடுவதற்கு
நானொன்றும் காட்டாறல்ல
தேங்கிக் கிடக்கும் குளம் நான்

சலனங்கள் என்னுள் படர்ந்து
கரைவதை வெறுமனே
பார்த்து கொண்டிருக்கும் குளம் நான்

என் குளக்கரையில் அமர்ந்துகொண்டு கல்லெறிவதை
தயவுசெய்து நிறுத்திவிடு
அவனின் எல்லா பிரயத்தனங்களுக்கு பின்னும்
ஒளிந்திருக்கிறது
ருசி கண்ட ஒரு மிருகத்தின் குரூரம்

அவள் பூர்த்தி செய்யும் எல்லா தேவைகளுக்கு
பின்னும் பதுங்கியிருக்கிறது
வெறிகொண்ட ஒரு செந்நாயின் தந்திரம்

பளிச்சென்று பல்லிளித்து
கொண்டிருக்கிறது
நிரம்பி வழியும் காமப்பாத்திரம்

Blogger Templates by Blog Forum