Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

வலியுணர்தல்

வீடு திரும்பும் பின்னிரவில்
வீதியங்கும்
வெப்பம் வன்கலவிய
காற்றின் துளிகள்

உரக்க உரையாடிக் கனத்த
இடைவெளிகளை
அருவருக்கத்தக்க மெளனங்களால்
நிரப்பிவிட்டிருந்தோம்

பற்கடிப்போ விசும்பலோ
தன்னிலை விளக்கமோ
ஒன்றிரண்டு கண்ணீர்துளிகளோ
 இதில்     ஏதாவது ஒன்றோ
சொல்லி விடுமா என்
வலியை எவருக்கும்

பாதையின் இருமருங்கிலும்
யாருமற்ற நிற்கும்
ஒற்றைப் பனைமரங்கள்
தலைபறக்க...

பிரித்துயர்

நெடிந்துயர்ந்த மரங்கள் சூழ் வனாந்தரத்தின்
ஒற்றையடி பாதையில்
பிரக்ஞையற்று ஊரும் பாம்பென
கடக்கவியலா இரவுகள்

கூந்தலில் அலைவுறும் உன்
விரல்களின் முடிவில்
மலர்ந்து கிடக்கும் பூக்காடு
முகிழ்ந்திருக்கும் என்
அறையெங்கும்

உதிரம் சொட்டும் கூரிய
பற்களையுடைய ஓநாயின்
வேகம் கொண்டு துரத்தும் தனிமை
போராடி களைத்த இரவின்
விதிகளில் விழி முடியுறங்கும்
குருவிகள்

உறையிலிருந்து பிரிக்கப்பட்டும்
புழங்கப்படாமலே கழியட்டும்
என் நாட்கள்!

உறுபசி

மரத்தினின்று உதிர்ந்து
மண்ணையடையும்
பழுத்த மஞ்சளடர்ந்த
இலையின்
சாத்தியத்திற்குப்பட்டதில்லை
நாட்காட்டி களைந்தெறியும்
நாட்கள்

தீராப்பசியுடன் தவிக்கும்
அட்சயப்பாத்திரம் ஒன்றை
கையிலேந்தி
தின்று மென்று விழுங்கி
போதாமல் விழையும்
இரவிலும் விழித்திருக்கும்
காடு

நீர்த்திவலைகள் முகத்திலறையும்
அருவியின்
நீண்ட கரையோரங்களில்
செழிந்திருக்கும் புதர்களினுடே
அடையாளமற்று சொரிந்திருக்கும்
பூக்கள்

நெளியும் புழுக்களின்
சாயலை ஒத்த
வார்த்தைகளைக் கொண்டு
இதை வடித்து
கொண்டிருப்பவனின் கையில்
உறைத்திருக்ககூடும்
உறுபசி
காலியாகிப் போன
மதுகோப்பையில்
நிரம்பிவிட்டிருந்தது
நிறமில்லாதொரு
வெற்றிடம்

வரவழைக்கப்பட்ட உற்சாகம்
வடிந்து போய்
வெகுநேரமாகி போயிருந்த
ஒர் இரவில்
ஆயத்தமில்லாமல் உயிர்பெற்று
கொண்டது நாளையற்ற
ஒன்றை குறித்ததென்
தீவிரம்

வரிசைப்படுத்தப்பட்ட
புட்டிகளில்
நிரம்பிகிடக்கிறது
பலவிதங்களாய் ரசம்

கோப்பையினுள்
நிரப்புவதும் பின்
காலிசெய்வதுமென
தள்ளாடியபடியே
வந்தடைகின்றன
பெருவாசலை கால்கள் .....

துயர் கொண்டலையும் வார்த்தைகள்

முன்னேற்பாடிலில்லாத ஒரு பொழுதில்
இரைந்து விட்டுச் சென்ற
வலிமிகுந்த சொற்களை
துடைத்தெறிகிறேன்
என்னிலிருந்து முற்றிலுமாக

மென்று விழுங்கிய பின்னும்
நாவிற்கடியில்
தேங்கி நிற்கிறது
காடியில் தோய்த்த
ஒன்றிரண்டு ...

கடும்பாலையன உறைந்துவிட்ட
அக்கணத்திலிருந்து
கையூன்றி கடக்கையில்
பிசுபிசுக்கிறது
மிதித்து நசுக்கிய
மனத்தின் ரணம்

அகந்தை கொண்டலைந்த
ஒரு பறவையின் அலகுகளுக்கு
தின்னக் கொடுத்துவிட்டதுபோக
எஞ்சியிருந்தது
உயிரற்றவை ஒன்றிரண்டு...

இதயத்தின் மிக அருகில்
நின்று விசும்பிக் கொண்டிருக்கிறது
ஏனென்று கேட்கபடாத
வலியொன்று...

Blogger Templates by Blog Forum