வலியுணர்தல்

வீடு திரும்பும் பின்னிரவில்
வீதியங்கும்
வெப்பம் வன்கலவிய
காற்றின் துளிகள்

உரக்க உரையாடிக் கனத்த
இடைவெளிகளை
அருவருக்கத்தக்க மெளனங்களால்
நிரப்பிவிட்டிருந்தோம்

பற்கடிப்போ விசும்பலோ
தன்னிலை விளக்கமோ
ஒன்றிரண்டு கண்ணீர்துளிகளோ
 இதில்     ஏதாவது ஒன்றோ
சொல்லி விடுமா என்
வலியை எவருக்கும்

பாதையின் இருமருங்கிலும்
யாருமற்ற நிற்கும்
ஒற்றைப் பனைமரங்கள்
தலைபறக்க...

பிரித்துயர்

நெடிந்துயர்ந்த மரங்கள் சூழ் வனாந்தரத்தின்
ஒற்றையடி பாதையில்
பிரக்ஞையற்று ஊரும் பாம்பென
கடக்கவியலா இரவுகள்

கூந்தலில் அலைவுறும் உன்
விரல்களின் முடிவில்
மலர்ந்து கிடக்கும் பூக்காடு
முகிழ்ந்திருக்கும் என்
அறையெங்கும்

உதிரம் சொட்டும் கூரிய
பற்களையுடைய ஓநாயின்
வேகம் கொண்டு துரத்தும் தனிமை
போராடி களைத்த இரவின்
விதிகளில் விழி முடியுறங்கும்
குருவிகள்

உறையிலிருந்து பிரிக்கப்பட்டும்
புழங்கப்படாமலே கழியட்டும்
என் நாட்கள்!

உறுபசி

மரத்தினின்று உதிர்ந்து
மண்ணையடையும்
பழுத்த மஞ்சளடர்ந்த
இலையின்
சாத்தியத்திற்குப்பட்டதில்லை
நாட்காட்டி களைந்தெறியும்
நாட்கள்

தீராப்பசியுடன் தவிக்கும்
அட்சயப்பாத்திரம் ஒன்றை
கையிலேந்தி
தின்று மென்று விழுங்கி
போதாமல் விழையும்
இரவிலும் விழித்திருக்கும்
காடு

நீர்த்திவலைகள் முகத்திலறையும்
அருவியின்
நீண்ட கரையோரங்களில்
செழிந்திருக்கும் புதர்களினுடே
அடையாளமற்று சொரிந்திருக்கும்
பூக்கள்

நெளியும் புழுக்களின்
சாயலை ஒத்த
வார்த்தைகளைக் கொண்டு
இதை வடித்து
கொண்டிருப்பவனின் கையில்
உறைத்திருக்ககூடும்
உறுபசி
காலியாகிப் போன
மதுகோப்பையில்
நிரம்பிவிட்டிருந்தது
நிறமில்லாதொரு
வெற்றிடம்

வரவழைக்கப்பட்ட உற்சாகம்
வடிந்து போய்
வெகுநேரமாகி போயிருந்த
ஒர் இரவில்
ஆயத்தமில்லாமல் உயிர்பெற்று
கொண்டது நாளையற்ற
ஒன்றை குறித்ததென்
தீவிரம்

வரிசைப்படுத்தப்பட்ட
புட்டிகளில்
நிரம்பிகிடக்கிறது
பலவிதங்களாய் ரசம்

கோப்பையினுள்
நிரப்புவதும் பின்
காலிசெய்வதுமென
தள்ளாடியபடியே
வந்தடைகின்றன
பெருவாசலை கால்கள் .....

துயர் கொண்டலையும் வார்த்தைகள்

முன்னேற்பாடிலில்லாத ஒரு பொழுதில்
இரைந்து விட்டுச் சென்ற
வலிமிகுந்த சொற்களை
துடைத்தெறிகிறேன்
என்னிலிருந்து முற்றிலுமாக

மென்று விழுங்கிய பின்னும்
நாவிற்கடியில்
தேங்கி நிற்கிறது
காடியில் தோய்த்த
ஒன்றிரண்டு ...

கடும்பாலையன உறைந்துவிட்ட
அக்கணத்திலிருந்து
கையூன்றி கடக்கையில்
பிசுபிசுக்கிறது
மிதித்து நசுக்கிய
மனத்தின் ரணம்

அகந்தை கொண்டலைந்த
ஒரு பறவையின் அலகுகளுக்கு
தின்னக் கொடுத்துவிட்டதுபோக
எஞ்சியிருந்தது
உயிரற்றவை ஒன்றிரண்டு...

இதயத்தின் மிக அருகில்
நின்று விசும்பிக் கொண்டிருக்கிறது
ஏனென்று கேட்கபடாத
வலியொன்று...

கண்ணீரின் குரல்

அந்தரத்தில் தாவும் கால்கள்
உணர்ந்திருக்குமா
வாழ்விற்கும் சாவிற்குமான
இடைவெளியின் தூரத்தை..


இருத்தலின் பசி இழுத்துச்
செல்கிறது எவரையும் ஏதோவொரு
விளிம்பின் எல்லைவரை ......


சிரித்து கொண்டிருக்கும் முகத்திற்கு
பின்னால் மறைந்திருக்கக்கூடும்
இது வரமா சாபமா
என்றதொரு முடிவில்லா கேள்வி...


யார் கேட்டிருப்பார்
அழுகின்ற கண்ணீரின்
குரலை.....

சிவசக்தி

சக்தியின் மீதேறி ஆடும்
சிவனின் கால்கள்
இறங்குவதேயில்லை
ஒருபோதும்


வலிந்து துடைத்தெறியும்
சக்தியின் கண்ணீர்
பெரும் ஆறாகி வழிகிறது
அவள் உடலெங்கும்


தன்இருப்பை விட்டு விலகிட
கால் கடுக்க
தவமிருக்கிறாள் சக்தி
பன்னெடுங்காலமாக...

Blogger Templates by Blog Forum